19/04/2025
https://www.facebook.com/share/p/18o9K2JmGY/
மர்ஹூம் உஸ்தாத் M.S. அஹ்மது ஜலாலுத்தீன் பாகவி நத்வி M.A. ரஹிமஹுல்லாஹ் (மறைவு 13.4.2025 ஷவ்வால் பிறை 14, ஹிஜ்ரி 1446)
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 130 ஆண்டுகளாக சமுதாயத்திற்கு மார்க்க அறிஞர்களை வழங்கி வரும் ஒப்பற்ற கல்விக்கூடமான வள்ளல் ஜமால் முஹ்யித்தீன் சாஹிப் (ரஹ்) அவர்கள் நிறுவிய தாருல் உலூம் ஜமாலிய்யா அரபு கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு மேல் உஸ்தாதாக பணியாற்றிய மூத்த பேராசிரியரும் அல்லாமா அஸ்ஸய்யிது அபுல் ஹசன் அலி அல்-ஹசனி அந்-நத்வி (ரஹ்) அவர்களின் நெருங்கிய மாணவரும் இலங்கை கஃபூரிய்யா அரபுக் கல்லூரி முன்னாள் முதல்வர் அல்லாமா அஷ்ஷெய்க் முஹம்மது ஷம்ஸுத்தீன் பாகவி (ரஹ்) அவர்களின் புதல்வருமான எங்கள் உஸ்தாத் பெருந்தகை அல்லாமா M.S. அஹ்மது ஜலாலுத்தீன் பாகவி நத்வி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் 13.4.2025 அன்று இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். إنا لله وإنا الله راجعون
மென்மையான குணத்திற்கு சொந்தக்காரர். மாணவர்களிடம் இனிமையாக பழகக் கூடியவர்கள். ஜமாலிய்யா மாணவ மன்றமான தர்பியத்துல் பயான் மாணவ மன்றத்தின் பொறுப்பாளராகவும் அதன் கௌரவ தலைவராகவும் இருந்தார்கள். ஜமாலிய்யாவின் பட்டமளிப்பு விழாக்களில் நீண்ட காலமாக நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
தமது உஸ்தாத் இந்திய தேசத்தின் மாபெரும் மார்க்க அறிஞர்களில் ஒருவரும் லக்னோ தாருல் உலூம் நத்வதுல் உலமாவின் முன்னாள் தலைவரும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய முன்னாள் தலைவருமான உலகம் போற்றும் மாமேதை அல்லாமா அஸ்ஸய்யிது அபுல் ஹசன் அலி அல்-ஹசனி அந்-நத்வி (ரஹ்) அவர்கள் அரபு மொழியில் இயற்றிய அல்-அர்கானுல் அர்பஆ மார்க்க கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜு பற்றிய விளக்க நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்.
ஜமாலிய்யாவில் உஸ்தாத் அவர்கள் முக்தஸர் (ஆலிம்) மாணவர்களுக்கு உஸூலுல் ஃபிக்ஹ் (இஸ்லாமிய சட்டவியல் அடிப்படைகள்) மற்றும் முதவ்வல் (ஃபாழில்) மாணவர்களுக்கு ஃபல்ஸஃபா (இஸ்லாமிய தத்துவயியல்) பாடமும் நடத்தினார்கள்.
2011ல் மாணவ மன்றத்தின் சார்பில் "அல்-ஜமால்" மலர் வெளியிடுவது பற்றி ஆலோசிப்பதற்காக மாணவ மன்ற பொருளாளரான நானும் மற்ற நிர்வாகிகளும் மன்றத்தின் பொறுப்பாளரான உஸ்தாத் அவர்களை சென்னை மண்ணடியில் உள்ள அவர்களின் கம்பெனியில் சந்திக்க சென்ற போது அவர்களின் மாணவர்களாகிய எங்களை இன்முகத்துடன் வரவேற்று மலருக்கான பல நல்ல ஆலோசனைகளையும் அறிவுரையும் வழங்கினார்கள் அத்துடன் அவர்கள் மொழிபெயர்த்த அல்-அர்கானுல் அர்பஆ நூலையும் எங்களுக்கு வழங்கியதுடன் அன்பளிப்பாக நூறு ரூபாயை கவரில் வைத்து எங்களுக்கு கொடுத்து மதிய உணவு அளித்து மாணவர்களின் மீதான பாசத்தை வெளிப்படுத்தினார்கள்.
வல்ல அல்லாஹ் சங்கைமிகு எங்கள் உஸ்தாத் பெருந்தகை அவர்களின் சேவைகளை ஏற்று அவர்களைப் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்
- மவ்லவி ஹாஃபிள் K. செய்யது அஹ்மது நெய்னா சித்தீகி ஜமாலி M.A.M.Phil., கீழக்கரை.
Darul Uloom Jamalia Arabic College دار العلوم الكلية العربية الجمالية